“மாரி மலை முழைஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும் சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீ விழித்து வேரி மயிர் பொங்க வெப்பாடுமா பேர்ந்துதரி மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டு போதருமா போலே நீ பூவைப்பூ வண்ணா உன் கோயில் நின்றிங்கின்னே போந்தருளி கோப்புடைய சீரிய சிங்காசனத்தில் தானமர்ந்து நான் வந்த காரியம் ஆராய்ந்து அறிந்தேலோரெம்பாவாய்”
சூடிக்கொடுத்த சுடர்கொடி ஆண்டாள் நாச்சியார் நரசிம்ம மூர்த்தியை பற்றி பாடியுள்ளார் திருப்பாவையில்..
“நாளை என்பது நரசிம்மனுக்கு இல்லை”என்று ஆன்றோர்கள் கூறுவார்கள்.. நினைத்த மாத்திரத்தில் நினைத்த இடத்தில் காட்சிதந்து பக்தர்களின் குறை தீர்ப்பான் அந்த நரசிம்ம பெருமாள்..
பக்தன் பிரகலாதனுக்காக மகாவிஷ்ணு நரசிம்மராக அவதரித்து, இரணியனை வதம் செய்த பிறகு, பிரகலாதனின் பிரார்த்தனையின் பெயரில் இந்தியாவில் அஹோபிலம் உள்ளிட்ட பல திருத்தலங்களில் கோயில் கொண்டு அருள்கிறார்..
அந்த வகையில், தமிழகத்தில் சோளிங்கர், நாமக்கல், பூவரசன்குப்பம், பரிக்கல், சிங்கிரிக்குடி, சிங்கப்பெருமாள் கோயில், அந்திலி, மற்றும் சிந்தலவாடி ஆகிய எட்டு தளங்களும் அஷ்ட நரசிம்மர் தலங்களாக உள்ளன.. அவற்றில், ஒரே நாளில் தரிசிக்க கூடியவகையில், ஒரே நேர்கோட்டில், மூன்று நரசிம்மர் ஆலயங்கள் அமைந்துள்ளன.. அவை, சிங்கிரிகுடி, பூவரசங்குப்பம் மற்றும் பரிக்கல் ஆகியவை.. இந்த மூன்று தலங்களையும் ஒரே நாளில் தரிசித்தால் கடன், குடும்ப பிரச்சனைகள் மற்றும் அனைத்து தோஷங்களும் விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை..
சிங்கிரிகுடி

புதுச்சேரியிலிருந்து இந்த ஸ்தலம் மிக அருகில் உள்ளது.. இதற்கு அபிஷேகப்பாக்கம் என்று மற்றொரு பெயர் உண்டு.. எனவே ஒரே நாளில் மூன்று நரசிம்மரை வழிபட விரும்புவார்கள் புதுச்சேரி வந்து பிறகு இந்த தலத்திலிருந்து வழிபாட்டைத் தொடங்கலாம்..
பெருமாளின் திருநாமம் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் (இரண்ய சம்ஹார நரசிம்மர்; உக்ர நரசிம்மர்). தாயாரின் திருநாமம் ஸ்ரீ கனகவல்லி தாயார்.
தரிசன நேரம் காலை 7 மணி முதல் 12:00 மணி வரை; மாலை 4.30 மணி முதல் இரவு 9 மணி வரை.. திருமணம் தடைபடும் அன்பர்கள் இங்கு வந்து ஸ்ரீ லட்சுமி நரசிம்மருக்கு அர்ச்சனை செய்து வழிபட திருமணம் நடைபெறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இங்குள்ள உக்ர நரசிம்மரை வழிபட, எதிரிகளின் தொல்லைகள் இருக்காது என்பதும் நம்பிக்கை..
பூவரசங்குப்பம்

இந்த தலம், சிங்கிரிகுடி யிலிருந்து 26 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.. நேர் கோட்டில் உள்ள லட்சுமி நரசிம்மர் தலங்களில் இரண்டாவதாக வழிபட வேண்டியது பூவரசன் குப்பத்தில் உள்ள ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் ஆலயம் ஆகும்.. பெருமாளின் திருநாமம் ஸ்ரீலட்சுமி நரசிம்மர்.. தாயாரின் திருநாமம் ஸ்ரீ அமிர்தவல்லி தாயார்..
தரிசன நேரம் காலை 8.30 மணி முதல் நண்பகல் 12.30 வரை.. மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை.. பூவரசங்குப்பம் நரசிம்மரை வழிபட, உடற்பிணி மற்றும் சகலவிதமான தோஷங்களும் நீங்கும் என்பது நம்பிக்கை..
பரிக்கல்

இந்த மூன்று நரசிம்மர் தலங்களில் நாம் இறுதியாக வழிபட வேண்டியது பரிக்கல் இல் உள்ள ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் ஆலயம் ஆகும்.. இந்தக் கோயில் பூவரசன் குப்பத்தில் இருந்து 39 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.. விழுப்புரத்திலிருந்து உளுந்தூர்பேட்டை செல்லும் வழியில், சுமார் 21 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது..
பெருமாளின் திருநாமம் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர்.. தாயாரின் திருநாமம் ஸ்ரீ கனகவல்லி தாயார்.
தரிசன நேரம் காலை 6.00 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை; மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை..
பதவி உயர்வு வேண்டுபவர்களும், பதவி இழந்தவர்களும் இங்கு வந்து பிரார்த்தனை செய்தால் அவர்களது வேண்டுதல் கண்டிப்பாக நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை..
சமீபத்தில் இந்த மூன்று திருத்தலங்களையும் தரிசிக்கும் பாக்கியம் எனக்கு கிட்டியது..

காலையில் பரிக்கல், நண்பகலில் பூவரசங்குப்பம், மாலையில் சிங்கிரிகுடி என்ற வரிசைப்படி தரிசிக்கவேண்டும்.. சீக்கிரமாக வழிபாட்டைத் தொடங்கினால்தான் மதியம் நடை மூடுவதற்குள் சிங்கிரிகுடி பூவரசங்குப்பம் தலங்களிலும் எளிதாக தரிசனம் செய்ய முடியும்.. பிறகு பூவரசங்குப்பத்தில் சற்று ஓய்வு எடுத்துக்கொண்டு மாலை பரிக்கல் புறப்பட்டு சென்று வழிபடலாம்.. மாலை 5 மணிக்குள் பரிக்கல் ஆலயத்தில் வழிபாட்டை முடித்தால்தான் தொலைவிலிருந்து வருபவனுக்கு வீடு திரும்புவதற்கு வசதியாக இருக்கும்..
சென்னையில் இருந்து செல்பவர்கள் காரில் சென்றால் புதுச்சேரியிலிருந்து தரிசனத்தை தொடங்கி பரிக்கல் முடித்துவிட்டு விழுப்புரம் வழியாக எளிதாக சென்னை வரலாம்.. இந்த வரிசையில் குழப்பம் ஏற்பட்டு விட்டால் ஐதீகப்படி வழிபாட்டைத் தொடர்வது சட்ட சிக்கலாகிவிடும்.. எனவே ஒரே நாளில் இந்த மூன்று நரசிம்மர் தலங்களையும் வழிபட புறப்படும் முன்பு நன்கு திட்டமிட்டு பயணத்தை அமைத்துக் கொள்ளுங்கள் அன்பர்களே!
“ஜெய் ஸ்ரீ நரசிம்மா..!!”