தமிழகத்தின் தென் மூலையில் விருதுநகர் மாவட்டத்தில் திருச்சுழி என்ற ஒரு கிராமம்.. அங்கே 1879 ஆம் ஆண்டு டிசம்பர் 30ஆம் நாள் சுந்தரம் ஐயர் அழகம்மாள் என்ற தீவிர தம்பதிகளுக்கு வேங்கட்ராமன் என்பவர் பிறந்தார்.. இவருக்கு நாகசாமி என்கிற மூத்த சகோதரர் உண்டு..
இளமைக்காலத்தில் இவர் மதுரையில் இருந்தபோது, ஸ்காட் நடுநிலைப்பள்ளியில் கல்வி பயின்றார்.. ஒரு முறை அவர்களது வீட்டிற்கு உறவுமுறையில் ஒரு பெரியவர் திருவண்ணாமலையிலிருந்து வந்திருந்தார்.. அவர் மூலமாக திருவண்ணாமலை பற்றிய ஆவல் நமது வேங்கட்ராமனுக்கு அதிகரித்தது.. அதுமட்டுமல்லாமல், பெரியபுராணம் போட்ட நூல்களைப் பயின்று வர இறை அடியார்கள் மீதும் இறைவனைப் பற்றி அறிதலிலும் நாட்டம் ஏற்பட்டது. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு செல்லும் பழக்கமும் ஏற்பட்டது. அவரது 17 ஆம் வயதில் மதுரையில் இருந்து அவரது சித்தப்பா வீட்டில் ஒருநாள் திடீரென ஒரு மரண சம்பவம் அவருக்கு அனுபவமாக ஏற்பட்டது. அந்த அனுபவத்தில் அவருள் எழுத்த ஒரு ஆத்ம விசாரம் மரணிப்பது எது? உடல் தானே மரணிக்கின்றது.. நான் மரணிப்பவன் அல்லன்.. ஆகவே உண்மையில் நான் யார்? என்று தனக்குள்ளே ஒரு விசாரணை செய்து, நான் உடல் அல்லன். நான் ஒரு ஆன்மா என்ற உண்மையை அறிந்தார்.
இந்த ஆன்மாவே எல்லாம் வல்ல பரம்பொருளாய் இருக்க வேறொன்றும் இல்லாத நிலையில் எல்லாவற்றையும் அறிந்து தெளிந்தார்.
இவ்வாறு ஆன்மீக தெளிவு பெற்ற பின் ஒரு நாள் தன் சுற்றமெல்லாம் துறந்து, 1896 ஆம் ஆண்டு செப்டம்பர் 1 அன்று ரயில் ஏறி திருவண்ணாமலையை வந்தடைந்தார். அங்கே அருணாசலேஸ்வரர் ஆலயத்தில் சிறிது காலம் தியானம் செய்தார். பின்னர் அங்கிருந்த பாதாள லிங்கத்தின் அருகில் சென்று தியானத்தில் அமர்ந்தார்.
இவர்தான் பின்னாளில்”ரமண மகரிஷி” என்று அறியப்பட்டார். திருவண்ணாமலை மலையைச் சுற்றியுள்ள விருபாக்ஷி குகை, கந்தாஸ்ரமம், மாமர குகை, குரு மூர்த்தம் என பல இடங்களில் வாசம் செய்து இறுதியில் மலை அடிவாரத்தில் தங்கினார். அங்கேதான் ரமணா ஆசிரமம் உருவானது. இவரது சீடர்களில் ஒருவரான காவிய கண்ட கணபதி முனி என்ற சமஸ்கிருத பண்டிதர் இவருக்கு ரமண மகரிஷி என்று பெயர் சூட்டினார். அதுவரை அவரை மக்கள் பிராமண சுவாமி என்று அழைத்தனர்.
கையில் ஏற்பட்ட கொடிய சார்கோமா புற்றுநோயால் ஏற்பட்ட கட்டியை மயக்க மருந்து எதுவும் இல்லாத நிலையிலேயே அறுவை சிகிச்சை மூலம் அகற்ற அனுமதி அளித்தார். அப்படிப்பட்ட மகான் 1950இல் தேகவியோகம் ஆனார்..
ரமணரின் முக்கியமான உபதேசம்”நான் யார்?”என்ற ஆத்ம விசாரம். உபநிஷத்துக்கள் மற்றும் அத்வைத வேதாந்த நெறிகள் ஆகியவற்றின் சாரத்தை இவரது ஊழியர்களில் காணலாம். ஆதிசங்கரரின் ஆக்கமான’ஆத்மபோதம்’என்பதனை தமிழில் வெண்பாக்களாக ரமணர் வழங்கியுள்ளார்.
“ஒரு பொருளை தியானிப்பது என்பது ஒரு போதும் உதவாது. தியானிப்பவனும், தியானிக்கப்படும் பொருளும் ஒன்றே என்பதனை உணர வேண்டும். தியானிக்கப்படும் பொருள் நுண்மையாக இருந்தாலும் சரி ஒன்றான தன்மையை அழிந்து நாமே இருமையை உருவாக்குகிறோம்..
பலகாலம் திருவண்ணாமலையின் பல இடங்களில் தங்கிய ரமண மகரிஷி 1922ல் அவரது தாயின் மறைவிற்கு பிறகு மலையின் அடிவாரத்தில் தாயார் சமாதி வைக்கப்பட்ட இடத்திற்கு வந்து அங்கேயே நிரந்தரமாகத் தங்கினார். அந்த ஆசிரமம் அவரது சீடர்களால் உருவாக்கப்பட்டது.. அவர் சமாதி அடையும் வரை அந்த ஆசிரமத்தை விட்டு வேறு எங்கும் செல்லவில்லை..
நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் திருவண்ணாமலையில் தான். சிறுவயதில் நான் பலமுறை இந்த ஆசிரமத்திற்கு சென்று வந்துள்ளேன்.. ஒரு அமைதியான சூழ்நிலை மனதில் சாந்தியை ஏற்படுத்தும்..
இப்போதும் வெளிநாட்டவர்கள் பலர் அந்த ஆசிரமத்திற்கு வந்து மன அமைதியை தேடி அங்கேயே நிரந்தரமாகத் தங்கி விடுகின்றார்கள்..
“ஓம் அருணாசலேஸ்வராய நமஹ!!”