அமர்நீதியார் சோழ நாட்டிலே, “பழையாறை“என்னும் பழமையான தொன்மையான பகுதியிலே பிறந்தார்.. ஏழாம் நூற்றாண்டுக்கு முற்பட்ட காலத்தில் பிறந்தவர்..
வணிகத்தால் பெரும் பொருள் தேடி செல்வந்தராக விளங்கிய இவர் சிவனடியாருக்கு உணவு, ஆடை, கீழ் கோவணம் அளித்தல் ஆகிய திருத்தொண்டுகளில் ஈடுபட்டு செய்து வந்தார்.. சிவனடியார்களுக்கு, உணவு கொடுப்பதற்காகத் திருநல்லூரில் மடம் கட்டினார்.. திருவிழாக்காலங்களில், தம் சுற்றத்தாரோடு தங்கியிருந்து அடியார்களுக்கு திருவமுது, உடை, கோவணம் என்பன அளித்து மகிழ்ந்தார்..
அன்பர் பணி செய்யும் அமர்நீதியாருக்கு சிவபெருமான் அருள்புரிய திருவுளம் கொண்டார்.. அவர், ஒரு நாள், அந்தணர் குலத்து பிரம்மச்சாரியாக கோலம் கொண்டார்.. கையில் இருகோவணம் முடிந்த ஒரு தண்டுடன், கோவண ஆடையுடன் திருநல்லூரில் உள்ள அமர்நீதியார் மடத்தை அடைந்தார்.. அவரைக் கண்டு, அமர்நீதியார் மிக முகமலர்ச்சியோடு, வரவேற்று உபசரித்தார்.. அமர்நீதியார் அவரை உணவுண்ண அழைத்தார்.. பிரமாச்சாரியார், அவரது வேண்டுகோளுக்கு இசைந்து, காவிரியில் நீராடச் சென்றார்..செல்லும் பொழுது “மழை வரினும் வரும்” என்று கூறி தமது தண்டில் கட்டி இருந்த கோவணம் ஒன்றை அவிழ்த்து, அமர்நீதியார் இடம் கொடுத்து அதனைப் பக்குவமாக வைத்திருக்கும்படி கூறிச் சென்றார்.. அமர்நீதியார், அதனை தனியாக ஓரிடத்தில் பத்திரப்படுத்தி வைத்தார்..

சிவனடியார் கோவணத்தை மறையும்படி செய்து, மழையில் நனைந்தவராக வந்தார்.. வைத்த கோவணத்தை கொண்டு வருமாறு கூறினார்..கோவணம் கொண்டுவரச் சென்ற அமர்நீதியார், அந்த கோவணம் வைத்த இடத்தில் காணாமல் திகைத்தார்.. பிற இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை.. பின்னர், பிறிதொரு கோவணத்தை எடுத்துக்கொண்டு பிரம்மச்சாரியிடம் வந்தார்.. “அடிகளே! நாங்கள் வைத்த கோவணத்தை வைத்த இடத்தில் காணவில்லை.. அது மறைந்தது பெரும் மாயமாக உள்ளது.! இது வேறு ஒரு நல்ல கோவணம்.. இது ஆடையில் கிழிக்கப்பட்டது அல்ல.. கோவணமாகவே நெய்யப்பட்டது நனைந்த கோவணத்தை களைந்து,இதனை அணிந்து, அடியேனின் குற்றத்தை பொறுத்து அருளுங்கள்” என வேண்டினார்..
இதனைக் கேட்ட சிவனடியார் சீறிச் சினந்தார்..
“அமர்நீதியாரே! நாம் உம்மிடம் தந்த கோவணத்திற்கு ஒத்தது தண்டில் உள்ள இந்தக் கோவணத்திற்கு இணையான கோவணத்தைக் கொடுப்பீராக” என்று கூறினார்.. அதனை ஏற்றுக்கொண்ட அமர்நீதியார், தராசின் ஒரு தட்டில், அடியார் தந்த கோவணத்தை வைத்து, அதற்கு ஈடாக தம்மில் உள்ள நெய்த கோவணத்தை மற்றொரு தட்டில் வைத்த போது அது நிறை போதாமையால் மேல் எழுந்தது.. அது கண்ட அமர்நீதியார், தாம் அடியார்களுக்குக் கொடுத்தற் பொருட்டு வைத்திருந்த கோவணங்கள் அனைத்தையும், ஒவ்வொன்றாக இட்டார்.. அப்போதும், அந்த அன்பரது தட்டு நிறையாமல் கீழே தாழ்ந்தது.. அந்நிலையில், அமர்நீதியார் தம்மிடம் உள்ள பொன், வெள்ளி, நவமணி திரள் முதலிய அரும் பொருள்களையும், பின்பு தன் மனைவி, மகன் ஆகியோரையும் தட்டில் அமர்த்தினார்.. அப்போதும் கூட தட்டு நேர் நிற்கவில்லை.. நாயனார் “நாங்கள் இழைத்த அன்பில் இறை திரு நீறு மெய் அடிமை பிழைத்திலோம் என்றால் இத்தராசின் தட்டு சமமாக நிற்பதாக” என்று “நமச்சிவாய” என்று ஓதி, தாமும் அதன் மேல் ஏறி அமர்ந்தார்.. அந்த நிலையில், அந்த தராசுத் தட்டுகள் சமமாய் நேர் நின்றன..

அடியாராக வந்த இறைவர், திருநல்லூரில் பொருந்திய அம்மையப்பராகிய, திருக்கோலத்தை அமர்நீதியாருக்கு காட்டி, அருளினார்.. அமர்நீதியாரும், மனைவியாரும், மைந்தரும் சிவலோக வாழ்வினைப் பெற்று இன்புற்றார்கள்..
“அல்லிமென் முல்லையந்தார் அமர்நீதிக் கடியேன்”- திருத்தொண்டத்தொகை
இவர் 63 நாயன்மார்களில் ஒருவராக திகழ்ந்தார்
இவர் முக்தி அடைந்த தலம் திருநல்லூர்..