சோழ நாட்டின் துறைமுக நகரமாக நாகப்பட்டினம் விளங்கிய காலம்.. நாகப்பட்டினம் கடற்கரைக்கு அருகே” நுழைப்பாடி” என்ற இடத்தில், பரதவர் என்னும் மீனவ இனத்தவர் மீன்பிடி தொழில் செய்து வாழ்ந்து கொண்டிருந்தனர்..

அவர்களுக்கு தலைவராக அதிபத்தர் என்பவர் இருந்தார்,, அவர் சிவபக்தி மிகுந்தவர்..அதிபத்தர் என்றால், “சிறந்த பக்தர்” என்று பொருளாகும்.. அவர் மிகுந்த சிவ பக்தி உடையவர், என்பதனால் தனக்கு கிடைக்கும் மீன்களில் சிறந்தது ஒன்றை, சிவபெருமானுக்கு அர்ப்பணம் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.. தனக்கு ஒரு மீன் மட்டுமே கிடைக்கும் காலங்களிலும், இந்த வழக்கத்தை தவறாது காத்து வந்தார்..

ஒரு சமயம், தொடர்ந்து ஒரு நாளுக்கு ஒரு மீன் மட்டுமே என்றவாறு கிடைத்து வந்தது.. அப்போதும், அந்த ஒரு மீனையும், சிவபெருமானுக்கு அர்ப்பணித்துவிட்டு,அதிபத்தர் பசியோடு இருந்தார்.. அவரைப் போலவே,நண்பர்களும், உறவினர்களும் உணவின்றி வருந்தினர்.. தொடர்ந்து வந்த நாளெல்லாம், இவ்வாறு ஒரு மீன் மட்டுமே கிடைப்பதே வழக்கமாக நிகழ்ந்தது.. ஆயினும், அதிபத்தர் தன்னுடைய பக்தியிலிருந்து தவறாமல், சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கும் செயலை செய்து வந்தார்..
அதிபத்தரை சோதிக்க எண்ணிய சிவபெருமான், ஒரு நாள் மீனுக்கு பதிலாக, தங்க மீனை அதிபத்தரின் வலையில் பிடிபடு மாறு செய்தார்..அந்த மீன், மீன் உறுப்பெல்லாம் அமைந்த ஒரு அற்புதமான படைப்பாக இருந்தது..அந்த மீன், இரத்தின மணிகள் பதித்த தங்க மீனாக இருந்தது..
அதனை வலையில் பிடித்த மீனவர்கள் மிகவும் மகிழ்ந்து அதிபத்தரிடம் கூறினார்கள்.. அன்றைய நாளில், அந்த மீன் ஒன்று தான் கிடைத்தது, என்பதால் அதனையும், சிவபெருமானுக்கு அதிபத்தர் அர்ப்பணம் செய்தார்..அதிபத்தரின் பக்தியை பாராட்டும்படியாக, சிவபெருமான், பார்வதியுடன் இணைந்து காட்சி தந்தார்.. அதன் பின் அதிபத்தருக்கு முக்தி அளித்தார்..

ஆண்டுதோறும், ஆவணி மாதம், ஆயில்யம் நட்சத்திரத்தன்று, அதிபத்தர், தங்க மீனை இறைவனுக்கு அர்ப்பணிக்கும் விழா, நாகப்பட்டினம் “காயாரோகணேஸ்வரர் கோயில்” நடை பெறுகிறது..

அன்று, அதிபத்தரின் உருவச்சிலையை, ஒரு கட்டுமரத்தில் எழுந்தருளச் செய்கிறார்கள்..கட்டுமரத்தில், உற்சவர் கடலுக்குள் மீன்பிடிக்க செல்கிறார்.. அப்போது மீனவர்கள், தங்க மீனை வலையில் வைத்து, கடலில் பிடித்ததைப் போல பாவனை செய்கிறார்கள்.. இது அதிபத்தர் தங்க மீனை பிடித்ததாக கொள்ளப்படும்.. அந்த வேளையில், சிவபெருமான் கடற்கரையில் எழுந்து அருளும் பொழுது, தங்க மீனை படைத்து, பூஜை செய்வார்கள்.. பிறகு சிவபெருமான், அவருக்கு முக்தி தரும் நிகழ்வும் நடக்கிறது.. அதிபத்தரின் குருபூஜை, ஒவ்வொரு ஆண்டும், ஆவணி மாதம், ஆயில்யம் நட்சத்திரத்தில், கொண்டாடப்படுகிறது..
இந்த ஆண்டு, ஆகஸ்ட் 18 அன்று நாகப்பட்டினத்தில் இந்த திருவிழா கொண்டாடப்பட்டது..
இவர் “அதிபத்த நாயனார்” என்ற பெயருடன் 63 நாயன்மார்களில் ஒருவராக துதிக்கப்படுபவர்..

இவரை “விரிதிரை சூழ் கடல் நாகை அதிபத்தர் அடியேன்” என்று திருத்தொண்டத் தொகையில் “சுந்தரமூர்த்தி சுவாமிகள்” குறிப்பிடுகின்றார்..
