இந்தப் பதிவு சற்று பெரியதாக இருக்கும் என்பதனால் பகுதிகளாக, பதிவிட விரும்புகிறேன்..
ஆனந்தம் என்றால் என்ன?மகிழ்ச்சி, இன்பம், இத்தியாதி.. தாய்க்கு,குழந்தைக்கு பாலூட்டுவது ஆனந்தம்.. தந்தைக்கு, குடும்பத்தை சீராக கொண்டு செல்வது, பிள்ளைகளுக்கு நல்ல கல்வி கொடுத்து, அவர்களை தங்கள் காலில் நிற்கச் செய்வது ஆனந்தம்.. கணவனுக்கு மனைவி அன்புடன் இருந்தால் ஆனந்தம்.. மனைவிக்கு, கணவன் மட்டுமல்லாமல் குழந்தைகளின் பாசமும் ஆனந்தம்.. இப்படி, ஒவ்வொன்றிலும் ஆனந்தம் உள்ளது.. இந்த ஆனந்தம், எதுவரை நீடிக்கும்? எல்லாவற்றுக்கும் ஒரு தன்னிறைவு புள்ளி(Saturation point) உண்டு..தாய், தனது குழந்தையை வளரும் வரை பாசம் காட்டி ஆனந்தப் படுவார்.. அவனுக்கு திருமணமாகி, இன்னொரு பெண், அவனிடம் அன்பு, பாசம் காட்டும் போது அவளது ஆனந்தம் நிறைவடைகிறது.. சில தாய்மார்கள், தங்கள் மகளிடம் அதிக பாசம் காட்டுவதனால், திருமணத்திற்குப்பின், தன் சொந்தத்தை பகிர்ந்து கொள்ள இன்னும் ஒரு உறவு உண்டானதும், அதை ஜீரணிக்க முடிவதில்லை.. அங்குதான் பிரச்னை ஆரம்பிக்கிறது.. இது பொசசிவ்னஸ்(possessiveness) கையாள தெரிந்த மகன் வெற்றி அடைகிறான்..
தந்தையை பொருத்தமட்டில், மகள் திருமணம் ஆகிப் போன பின்னர், மகன் திருமணமாகி தனியாக போனாலும், கூடவே இருந்தாலும், அவரது ஆனந்தம் நிறைவடைகிறது.. 75% பெற்றோர் இன்று தனித்து விடப் பட்டுள்ளனர்..சூழ்நிலை அப்படி.. மேலே சொன்னவை யாவும், சிறிய ஆனந்தங்கள்.. இவற்றில், இருந்து மீண்டு வருவதும், பரம்பொருளை நாடுவதுமே, பேரானந்தம் ஆகும்..
இறை, உயிர், தளை எனும் மூன்றில்,உயிரே மற்ற இரண்டிலும் பயன் கொள்வதாகும்.. மூன்றாவதில் இருந்து விடுபட்டால், முதலிடத்திற்கு வரலாம்..இந்த மூன்றாவது தளை என்பது பாசம் என்னும் விலங்கு..இதில் இறையை அடைய நினைக்கும் ஆன்மாக்களுக்கு இது பகை..ஆணவம்,கன்மம், மாயை என்ற மூன்றுமே தளை( விலங்கு) ஆகும்.? வீடுபேறு, மோக்ஷம் இரண்டுமே ஒன்றினையே குறிக்கும் உயர்ச்சொல் ஆகும்.. தளையினின்று விடுதலை பெறுதல் வீடு; அதனை பெறுவது பேறு.. ஒரு நிலையை அடைய வேண்டுமானால் பல மார்க்கங்கள் உள்ளன.. ஓரிடத்தில் நாம் அடைய வேண்டுமானால், ரயில், பஸ், கார் போன்ற சாதனங்களை உபயோகிக்கிறோம்.. ரயில் ஒரு மார்க்கம்.. கார்,பஸ் ஆகியன மற்றொரு மார்க்கம்.. ஆனால் சென்றடைவது ஒரே இடம்தான்..
நமது தொன்மையானமையான இந்து மதத்தில்,மிகப்பெரிய இரண்டு சமயங்கள் உள்ளன.. ஒன்று சைவம், மற்றொன்று வைணவம்.. இவை இரண்டுமே, பரம்பொருளை அடைவதற்கான வழிகளைக் கூறுகின்றன..
பரம்பொருள் என்றால், மிக மேலான பண்புகளை கொண்டு எங்கும் வியாபித்து, நீக்கமற நிறைந்து, எல்லாவற்றிற்கும் காரணமாக இருக்கும் பொருள் என்று வரையறுக்கப்பட்டுள்ளது.. இறைவனை, the supreme being., the ultimate., the highest of the highest.,என்ற பொருளில் குறிப்பிடப்படுவது..இதற்கு மற்றொரு பெயர் பரமாத்மா.. ஆத்மா என்றால் ஒரு உருவமற்ற மூலப்பொருள்.. எப்படி தண்ணீரானது, அது இடப்படும் பாத்திரத்திற்கு ஏற்றார் போல் தனது உருவத்தை அடைகிறதோ, அதுபோல ஆத்மா என்ற ஜீவன் அந்த உருவத்தை அடைகிறது.. ஆத்மா, இரண்டு வகைப்படுகிறது.. ஒன்று ஜீவாத்மா; மற்றோன்று பரமாத்மா.. இந்த ஜீவாத்மா, பரமாத்மா பற்றிய நுணுக்கங்களை நமது ஆசாரியர்கள் விவரித்துள்ளனர்.. அந்தப் பெரிய மகான்கள் 1) ஸ்ரீ மத்வர் 2) பகவத் ராமானுஜர் 3) ஸ்ரீ ஆதிசங்கரர்.. இவர்களது கொள்கைகளில்வேறுபாடு இருந்ததே அன்றி, அடையப்போகும் இலக்கு, ஒன்றுதான்.. முதல் இருவரும் பரம்பொருள் நாராயணரை பரமாத்மாவாக கொண்டவர்கள்.. ஸ்ரீஆதிசங்கரர், பரமேஸ்வரனை பரமாத்மாவாக கொண்டவர்.. இவர்களது கொள்கைகள் 1)த்வைதம்(மத்வர்) 2) அத்வைதம் (ஆதி சங்கரர்) 3) விசிஷ்டாத்வைதம் ( ராமானுஜர்) என்பன ஆகும்..
த்வைதம்
மத்வர் கொள்கைப்படி,ஜீவாத்மா, பரமாத்மா வெவ்வேறு ஆனது.. பரமாத்மா சுதந்திரர்.. ஜீவாத்மா சுதந்திரமற்றவர்.. பரமாத்மாவின் ஆளுகைக்கு உட்பட்டவர்கள்..
விசிஷ்டாத்வைதம்
மத்வருக்கும், ஆதிசங்கரருக்கும் இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்த ராமானுஜரால் உருவாக்கப்பட்டது இந்த கொள்கை.. விசிஷ்டாத்வைதம் என்றால் விசேஷமான ஒன்று என்று பொருள்பட கூறலாம்.. அதாவது சிறப்பான ஒருமை.. அத்வைதத்தில், பரமாத்மாவும், ஜீவாத்மாவும் வேறு வேறு அல்ல; பரமாத்மாவின் பிரதிபலிப்பு தான் ஜீவாத்மா என்பதனால் இருப்பது பர பிரம்மம் மட்டுமே என்கிறது அந்த தத்துவம்..
ஆனால் விசிஷ்டாத்வைதத்தில் பரமாத்மா எனப்படும் பர பிரம்மம், தான், அனைத்திலும் வியாபித்து இருக்கிறது என்ற வகையில் இரண்டும் ஒன்றே என்ற போதிலும் ஜீவாத்மாக்களை விட பரப்பிரம்மம் மேம்பட்டது.. அதனால், அது சற்று வேறுபட்டது சிறப்புடையது என்று சொல்லப்பட்டுள்ளது..
இந்த மூன்று கொள்கைகளையும் இணைத்து வேதாத்திரி மகரிஷி ஒரு விளக்கம் அளித்துள்ளார்..அது 1) தட்டின் முன் உணவு- துவைதம்..2) வயிற்றுக்குள் உணவு சாரமானது- அத்வைதம்.. 3) இந்த இடைப்பட்ட நேரத்தில் நடந்த கிரியைகள்- விசிஷ்டாத்வைதம்..
இனி மார்கங்கள் வேறானாலும், பயன்படுத்தப்பட வேண்டிய சாதனங்கள் வேறானாலும், அடையும் நிலை ஒன்றுதான்.
.

எனவே, இறையை அடைய சைவ சமயக் கொள்கைகள் என்ன சொல்கின்றன? வைணவ சமயக் கொள்கைகள் என்ன சொல்கின்றன? என்று பார்ப்போம்..
இவற்றினை அடுத்த பதிவில் சொல்கிறேன்..
மீண்டும் சந்திப்போம்…