இந்த பதிவு வரலாற்றின் அடிப்படையிலேயே ஆனாலும் ஆன்மீகத்துடன் தொடர்புடையது என்பதை வாசகர்கள் இறுதியில் புரிந்துக் கொள்வீர்கள்.. இந்தப் பதிவு சற்று நீண்ட பதிவாக உள்ளதால் இரண்டு அல்லது மூன்று பாகங்களாக பதிவு செய்ய விரும்புகிறேன்..
கி.பி(1336-1646) தென்னிந்தியாவின் தற்கால கர்நாடகா,ஆந்திரா,தெலுங்கானா, தமிழ்நாடு மற்றும் கேரளாவில் பெரும்பாலான பகுதிகளை கொண்ட பேரரசு விஜயநகர பேரரசு.. தென்னிந்தியாவில் டில்லி சுல்தான்களின் ஆட்சி விரிவாக்கத்தை தடுக்கவே 1336 ஆம் ஆண்டில் முதலாம் ஹரிஹரர் மற்றும் முதலாம் புக்கரால் அவர்களின் குரு ஸ்ரீ வித்யாதரன் யின் ஆசியுடன் விஜயநகரப் பேரரசு நிறுவப்பட்டது

.. அதன் அடிப்படையில் இந்த பதிவு எழுந்தது..
ஹரிஹரர், துங்கபத்திரை நதிக்கரையின் ஓரத்தில் விஜயநகர பேரரசை நிறுவினார்.

. அவரது சகோதரர் புக்கராயர்.. இவர்களது ஊழியர்களும், இராஜப் பிரதானிகளும், இவர்களிடத்தில் மிகவும் அன்புடனும், விசுவாசத்துடன் நடந்து கொண்டனர்.. இவர்களது அதிகார வளர்ச்சியினைக் கண்டு எதிரிகள் யாவரும் அஞ்சியே வாழ்ந்தனர்.. இவர்கள் கொடைத்தன்மை மிக்கவர்கள்.. இவர்களின் கரங்களால் வழங்கப்படும் கொடை எனும் நீரானது தருமம் எனும் மரத்தினை நன்கு வளரச்செய்து கலி காலத்தில் ஏற்பட்ட பாவங்களை எல்லாம் போக்கும் வண்ணமாக இருந்தது.. இவர்களிடத்தில் ஏராளமான யானைப்படைகளும், குதிரைப் படைகளும், காலாட்படைகளும் இருந்தன..இவர்களது பேரரசு, வடக்கே விந்தியமலை, தெற்கே மலா மலை; கிழக்கே உதயசாலா மலை,( இந்த மலையின் மேலே சூரியன் உதிக்கும்) மற்றும் மேற்கே, அஷ்டசாலா மலை(இந்த மலையின் பின்னே சூரியன் மறையும்) ஆகியவைகளை எல்லைகளாக கொண்டிருந்த..து அவர்களது தலைநகரான விஜயநகரத்தில், மேரு மலையை ஒத்த கோபுரங்களும் இயற்கையான அந்த மரங்களும், செயற்கை நீச்சல் குளம், ஆகியவைகள் இருந்தனக்ஷ இந்த தலைநகரின் புறநகராக ஹம்பி இருந்தது.. துங்கபத்திரை நதி, நகரின் முக்கிய நீர் ஆதாரமாக இருந்தது.. ஹம்பியில் அருள்மிகு விருபாட்சர் கோயில் உள்ளது.. புக்கரின்ஆட்சியினை மக்கள் மனுதர்மம் நிலைநாட்டும் அரசுக்கு ஒப்பாக போற்றி புகழ்ந்தனர்.. புக்கராயர் தர்ம, அர்த்த, காமம் ஆகியவற்றிற்கு உரிய மதிப்பை அளித்தாலும், புருஷார்த்தத்திற்குச் சற்று வஞ்சனையே செய்திருந்தார்.. இவருக்கு பல மனைவிகள் உண்டு.. ஆனால், அரசி தேவாயி என்பவரிடம் மட்டிலுமே மற்ற ராணிகளைக் காட்டிலும்,அதிக அன்பு செலுத்துவார்.. அரசி தேவாயி மூன்று பிள்ளைகளை பெற்றார். அவர்கள் 1)கம்பணன் 2) கம்பணன் (?) மற்றும் 3)சங்கமா.. என்று பெயர்.. புக்கராயருக்கும் தேவாயிக்கும் பிறந்த அந்த மூன்று புதல்வர்களும், சிவபெருமானின் மூன்று கண்களுக்கு ஒப்பாக இருந்தனர்..மூத்த கம்பணனைக் கருவில்சுமந்து இருந்தபோது, அரசி தேவாயி தாமிரபரணி ஆற்றில் நீராட வேண்டும் என்று ஆசைப்பட்டாள்.. அதுவே அப்பேரரசு தெற்கே குமரி வரை விரிவடைய வேண்டும் என்ற ஆசையின் வித்தாக அமைந்தது.. பிறந்த மகனுக்கு கம்பணன் என்று பெயரிடப்பட்டது.. அவன் பெயரை கேட்ட மாத்திரத்தில் எதிரிகள் அஞ்சுவார்கள் என்று கருதி அந்தப் பெயர் வைக்கப்பட்டது.. மூன்று குழந்தைகள் பிறந்தாலும் முதல் கம்பணனையே சரித்திர நாயகன் ஆகிறான். ஆனால் அவன் ஆய கலைகள் அனைத்தையும் கற்று தேர்ச்சி பெற்றான்.. அஸ்திர சஸ்திர வித்தைகளிலும் மிகச் சிறந்தவனாக விளங்கினான்.. ஒரு நாள் புக்கராயன்,இளவரசன் கம்பணனை அழைத்து உபதேசம் செய்தார்..சூது, வாது,மது மற்றும் மாது ,வேட்டை ஆகியவற்றில் ஏற்படும் தீய விளைவுகள் பற்றி எடுத்துரைத்தார்.. இவற்றை எல்லாம் இளவரசர் தமது வாழ்நாளில் தவிர்க்க வேண்டுமென்று அறிவுறுத்தினார்.. நன்னடத்தை காரணமாக சிக்கலான விஷயங்கள் கூட அவனது விருப்பத்திற்கு ஏற்ப மாறும் என்றும் கூறினார்.. தமதுகீழே பணிபுரியும் ராஜ பிரதானிகள் யாவரும் தமது விருப்பத்தின் படி கம்பணனுக்கு நம்பிக்கையுடன் ஊழியம் செய்வார்கள் என்றும் கூறினார். பல்வகை சேனைகள் உள்ளன; இவற்றில் இளவரசர் எந்த நிலையிலும் தன்னை முன்னிலை படுத்தி, தமது திறமையை வெளிப்படுத்த வேண்டும் என்றும் கூறினார்.. அதன் பிறகு தொண்டை மண்டலத்தை ஆண்டு கொண்டிருக்கும் சம்புவராயரை முதலில் வென்று காஞ்சிபுரத்தை தனது தலைநகரமாக ஆக்க வேண்டும்.. அதன் பின்னர் துருக்க அரசர்களையும் வென்று மதுரையை தலைநகராக ஆக்கிக் கொள்ள வேண்டும் என்றும் கூறினார்..

மறுநாள், அதிகாலை, சூரிய உதயம் ஆனதும் கம்பணன், தமது நித்திய அனுஷ்டானங்களை முடித்து, படைகளை தெற்கு நோக்கி புறப்பட தமது தளபதிக்கு உத்தரவிட்டார்..

அவரது படையெடுப்பின் முகாமில் ,ஒரு நாள் ஒரு புதிய பெண் கம்பணர் முன்னர் தோன்றி “ஓ! மன்னா!! தென்னிந்தியாவின் தெற்குப்பகுதி, துருக்கியர்களால் (இஸ்லாமியர்கள்) பாழடைந்து விட்டது.. வியாக்ரபுரி (சிதம்பரம்,திருப்புலிவனம்) ஆகிய இடங்களில் புலி வாழ்ந்த பகுதிகள் யாவும் இப்போது நரிகளும், ஓநாய்களும் ஊளையிடுகின்றன..ஸ்ரீரங்கம் கோயில், கோபுரம் சிதிலமடைந்து விட்டது..அதேபோன்று திருவானைக்காவல் கோவில் மிகவும் பழுதடைந்து விட்டது.. ஒரு காலத்தில் மங்கள இசை முழங்கிய ஆலய மண்டபங்களில் இன்று நரிகளின் ஊளை சத்தம் தான் கேட்கின்றது.. அணைகளால் தடுக்கப்பட்டு அழகாய் ஓடிக்கொண்டிருந்த காவிரி ஆறு, இன்று, மடைகளை உடைத்துக்கொண்டு விருப்பம்போல் ஓடுகிறது.. அக்ரஹாரங்களிலா ஹோமத் தீயில் இடப்படும் நெய்யின் வாசம் போய் இன்று முகமதியர்கள் மாமிசம் சுடும் வாசம் தான் மேலோங்கி நிற்கிறது.. மதுரையை சுற்றி வான் நோக்கி நின்ற தென்னை மரங்கள் யாவும் இன்று வெட்டப்பட்டு காட்சியளிக்கின்றன. மகளிர் தாமிரபரணியில் குளிக்கும்போது அவர்களது உடலை விட்டு வெளியேறும் சந்தனமும் மஞ்சளும் கலந்து குழம்பாக முன்பு காட்சியளிக்கும்.. ஆனால் அந்த தாமிரபரணி, இன்று பசுக்களின் ரத்தம் கலந்து செந்நீராக ஓடிக்கொண்டிருக்கிறது..” இவ்வாறு அந்த பெண்மணி கம்பணனிடம்,தென்னிந்தியா இஸ்லாமியர்களால் ஆட்சியால் சீரழிந்து விட்டது என்று எடுத்துக்கூறி “ஓ!!மன்னா!! முன்பொரு காலத்தில் தேவர்களின் அனைத்து ஆயுதங்களையும் ஒன்றாக்கி, தேவசிற்பி விஸ்வகர்மாவால் செய்யப்பட்டு அரக்கர்களை அழிக்க பரமேஸ்வரனுக்கு ஒரு ஆயுதம் வழங்கப்பட்டது.. கடும் தவம் புரிந்து ஒரு பாண்டிய மன்னன் அந்த ஆயுதத்தை பரமேஸ்வரனிடம் இருந்து பெற்றார்.. ஆயுதங்களை கொண்டு பகைவர்களை அழித்து வந்த பாண்டிய மன்னன் பன்னெடுங்காலம் ஆட்சி புரிந்து வாழ்ந்தார்..ஆனால் துரதிர்ஷ்டவசமாக பாண்டியனின் குலம் வீழ்ச்சி அடைந்தது.. அந்த ஆயுதம், தற்போது வாளின் வடிவத்தில் அகஸ்திய முனிவரால் எனக்கு தரப்பட்டது..அதனை தங்களுக்கு நான் வழங்குகிறேன்..இதனை கொண்டு அந்த கொடுங்கோல் ஆட்சி செய்யும் இஸ்லாமியர்களை வெட்டி வீழ்த்தி, ஸ்ரீகிருஷ்ணர் கம்சனை அழித்த மதுராவை மீட்டது போல தாங்களும், இந்த மதுரையை மீட்கவேண்டும்..ராமேஸ்வரம் வரை தங்களது வெற்றி ஸ்தூபங்களை ஏற்படுத்த வேண்டும்..காவிரியில் நீர் பெருக்கை வழிப்படுத்த சிறந்த ஒரு அணையை கட்ட வேண்டும் என்று கூறினாள்.. இந்த பெண் யாரென்று தெரியவில்லை? ஒருவேளை, மதுரை மாநகரின் காவல் தெய்வம் அந்நகருக்கு ஏற்பட்டதீங்குகளை பொறுக்காமல் பெண் உருவம் கொண்டு வந்து இருக்கலாம்.. அவள், அங்கு இருந்த அகஸ்தியர் ஆசிரமத்தில் இருந்த வாளினை எடுத்து வந்து இருக்கலாம்..
இனி தென்னிந்தியாவில் இஸ்லாமியர்கள் படையெடுப்பு எப்போது துவங்கியது என்பதை அடுத்த பதிவில் பார்ப்போம்
நாளை சந்திப்போம்..