சந்திரகுலம் தோற்றம் பற்றி சில வரிகள் சென்ற பதிவில் இறுதியில் பதிவு செய்திருந்தேன்.. அதனைத் தற்போது தொடர்கிறேன்..
ஒருமுறை தேவ மகளிர் நதியில் நீராடிக் கொண்டிருந்த போது அவர்களில் அழகில் சிறந்த ஊர்வசியைக் ‘ கேசி’ என்பவன் கவர்ந்து சென்றான்.. மகளிரின் அலறல் சத்தம் கேட்டு அவ்வழியே வந்த புருவரன் ஊர்வசியை மீட்டு இந்திரனிடம் ஒப்படைத்தான்.. தேவேந்திரன் மகிழ்ந்து ஊர்வசியை புருவரனுக்கே தநது விட்டான்.. சிறிது காலம் அவனுடன் வாழ்ந்த ஊர்வசி இந்திரலோகம் திரும்பினாள்..

புருவரனுக்கும் ஊர்வசிக்கும் பிறந்தவன் ‘ ஆயு’ எனப்படுவான்.. அவன் வழியில் தோன்றியதே சந்திர குலம் ஆகும்..இவனது மனைவி ‘ அசோகசுந்தரி‘ இவள் சிவனுக்கும் பார்வதிக்கும் பிறந்தவள் என்று பத்ம புராணத்தில் கூறப்பட்டுள்ளது..இந்த அசோக சுந்தரி பற்றி ஒரு தனி பதிவு செய்கிறேன்

இவர்களுக்கு பிறந்தவன் ‘ நகுஷன்’ ஆவார்.. இவன் நூறு அசுவமேத யாகம் செய்ததால் இந்திரப் பதவி கிடைத்தது..அதனை ஏற்றுக் கொள்ள இந்திரலோகம் செல்ல, இவனது பல்லக்கை சப்த ரிஷிகள் சுமந்து சென்றனர்.. அவர்களில் அகஸ்த்திய முனிவரும் ஒருவர்.. அவர் சற்று குள்ளமாக இருந்ததால் மெதுவாக சென்றார். இந்திரலோகம் நெருங்கும் போது இந்திராணியை அவன் பார்த்தான்.. அவளது அழகில் மயங்கிய நகுஷன் தம்மை சுமந்து செல்லும் முனிவர்களை வேகமாக செல்லுங்கள் எனும் பொருள்பட ‘ சர்ப்ப, சர்ப்ப, என்று கூறி அகஸ்தியரை காலால் சீண்டினான்..சர்ப்ப என்ற சொல்லுக்கு ஸம்ஸ்க்ருதத்தில் விரைவாக என்றும் பாம்பு என்றும் இரண்டு பொருள் உண்டு.. அகஸ்தியர் கோபமுற்று அவனைப் பாம்பாக போகுமாறு சபித்தார்.. அவன் பாம்பாக மாறி காட்டில் அலைந்து கொண்டு இருந்தான்.. பிற்காலத்தில் அவன் காட்டில் வந்த பஞ்ச பாண்டவர்களில் ஒருவனான பீமனை விழுங்க, தருமர் நகுஷனுக்கு அறிவுரை வழங்கினார்.. அதன் பெயரில் அவன் சாபம் நீங்க பெற்றதாக மகாபாரதம் கூறுகிறது..நகுஷனின் புதல்வன் ‘யயாதி’ ஆவான்.. இவன் அஸ்தினாபுரத்தை தலைநகரமாகக் கொண்டு குரு நாட்டை ஆண்டு வந்தான்.

தேவயானி என்பவள் அசுர குரு சுக்கிராச்சாரியாரின் மகள்.. சுக்கிராச்சாரியாரிடம் சஞ்சீவினி மந்திரத்தை கற்க தேவகுரு ப்ரஹஸ்பதியின் புதல்வன் கசன் வந்தான்.. அவன் மீது தேவயானி ஒரு தலைக் காதல் கொண்டாள்.. அசுரர்கள் ஒருநாள் கசனைக் கொன்று சுக்கிராச்சாரியாருக்கு உணவாக சமைத்து கொடுத்து விட்டனர்..இதனை அறிந்த தேவயானி, சுக்கிராச்சாரியாரிடம் வேண்ட, அவர் அவனுக்கு வயிற்றில் இருக்கும் போதே சஞ்சீவினி மந்திரத்தை உபதேசித்தார்.. அவன் அதனைப் பயன்படுத்தி உயிர் பெற்று அவரின் வயிற்றைக் கிழித்துக் கொண்டு வெளியே வந்தான்.. பின்னர் மீண்டும் சஞ்சீவினி மந்திரத்தை பிரயோகித்து சுக்கிராச்சாரியார் உயிர் பெறச் செய்தான்..
தேவயானி, கசனிடம் தன் காதலை வெளிப்படுத்தி தன்னை மணந்து கொள்ளுமாறு வேண்டினாள்.. அதற்கு கசன் தான் அவளது தந்தை வயிற்றின் மூலமாக மறுபிறப்பு எடுத்ததால் அவளுக்கு தான் சகோதரன் முறை வேண்டும் என்று கூறி அவள் காதலை மறுக்கிறான்.. அதனால் ஆத்திரமடைந்த தேவயானி, கசன், அவளது தந்தை சுக்கிராச்சாரியாரிடம் கற்ற மந்திரம் பலிக்காமல் போகும் என்று சாபமிடுகிறாள்.. பதிலுக்கு கசன் அந்தண ஸ்திரீயான அவளை ஒரு அந்தணன் திருமணம் செய்யாது க்ஷத்திரியன் தான் திருமணம் செய்வான் என்று சபிக்கின்றான்..
கசனின் சாபத்தின்படி தேவயானி சந்திர குல மன்னனான யயாதியை மணக்கிறாள்.. அசுர குல அரசன் விருச பர்வாவின் மகள் சர்மிஷ்டை.. இவள் தேவயானி யயாதியை மணக்கும் போது வரதட்சணையாக தேவயானியுடன் அனுப்பி வைக்க படுகிறாள்.. அவள் மேல் காதல் கொண்ட யயாதி தேவயானிக்குத் தெரியாமல் சர்மிஷ்டையை மணந்து கொள்கிறான்..
யயாதிக்கும் தேவயானிக்கும் ‘ யது, துர்வசு‘ என்ற இரண்டு மகன்களும்,சர்மிஷ்டைக்கு ‘ திரஹ்யு,அனு, மற்றும் புரு‘ ஆகிய மூன்றுமகன்களும் பிறக்கின்றனர்.
யயாதிக்கும் தேவயானிக்கும் பிறந்த மூத்த மகன் யதுவின் வழித்தோன்றல்கள் யாதவர்கள் என்றும், இரண்டாவது மகன் துர்வசு வழித்தோன்றல்கள் சேர சோழ பாண்டிய மன்னர்கள்’ என்றும் புராணங்களில் கூறப்பட்டுள்ளது.. இவர்களில் ஒரு பிரிவினர் ஒழுக்கம் குன்றி அரேபிய தேசம் அடைந்து யவனர்கள் ஆகினர்..யயாதிக்கும் ஷர்மிஷ்டைக்கும் பிறந்த மூன்றாவது மகன் திரஹ்யூவின் வழித்தோன்றல்கள் போஜர்கள் என்றும் , நான்காவது மகன் அனுவின் வழித்தோன்றல்கள் மிலேச்சர்கள் என்றும் ஐந்தாவது மகன் புருவின் வழித்தோன்றல்கள் பௌரவர்கள் என்றும் அழைக்கப் பட்டனர்..
எடுத்துக் கொண்ட தலைப்பிற்கும் இந்த கதைகளுக்கும் என்ன தொடர்பு? எதற்காக இவற்றினை இடைச் செருகல் செய்தேன் என்று வாசகர்கள் கேட்கலாம்.. ஒரு குறிப்பிட்ட காலங்களைப் பற்றி ஆராயும் போது அந்த கால கட்டத்தில் வாழ்ந்த மக்கள் அவர்களின் பரம்பரை பற்றி தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது.. மேலும், வெறும் காலங்களைப் பற்றி மட்டும் சொல்லிக்கொண்டே இருந்தால் தொடருக்கு ஒரு சுவாரஸ்யம் இருக்காது.. என்ன வாசகர்களே? நான் சொல்வது சரிதானே?
அடுத்து சந்திப்போம்