சூரிய குலம்
இந்து தொன்மவியலின் படி சூரியனுக்கும் சந்தியா தேவிக்கும் பிறந்தவர் வைவஸ்வத மனு.. இவர்தான் மனுஸ்ம்ருதியை இயற்றியவர்..விவஸ்வான் தான் சூரிய குல முதல் மனிதர்.. இவர் தொடங்கி இவரது வழித்தோன்றலும் பேரனுமாகிய இஷ்வாகுவின் வழி வந்த அரச வம்சம் சூரிய குலம் என்றும் அதன் பின்னர் தோன்றிய மன்னர் ரகுவின் வம்சத்தினரையும் ரகு வம்சம் என அழைக்கப்பட்டனர்..இதனைப் பற்றியை ராமாயண கதையை ஒற்றி மகாகவி காளிதாஸ் “ரகுவம்சம்” என்ற நூலை இயற்றினார்.. இந்த வம்சத்தில் பிறந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் திரிசங்கு, அரிச்சந்திரன், பகீரதன் ஆகியோர் ஆவர்.. மேற்படி அரசர்களின் வரலாறு வாசகர்கள் அறிந்து இருப்பர்.. என்றாலும் அவர்களைப் பற்றிய சிறு குறிப்புகள் அளிக்கலாம் என்று எண்ணுகிறேன்..
திரிசங்கு

திரிசங்கு அயோத்தியைத் தலைநகரமாக கொணட திரியருணியின் புதல்வன்.. இயற்பெயர் சத்யவ்ரதன்.. பெயருக்கு கொஞ்சமும் தொடர்பில்லாத வகையில் இவன் அதர்ம வழியில் வாழ்ந்தான்..இவனது தந்தை இவனை வசிஷ்டரின் ஆலோசனைப்படி நாடு கடத்தினார். சில ஆண்டுகள் கழித்து மன்னர் திரியருணி காட்டிற்கு செல்ல, நாட்டில் அநீதியும் பஞ்சமும் தலை விரித்து ஆடியது.. விஸ்வாமித்திரர் குடும்பத்தை விட்டு கடற்கரையில் கடுந்தவம் புரிந்து வந்தார்.. இந்நிலையில் நாட்டினில் வாழ்ந்து வந்த அவரது குடும்பத்தினர் பட்டினியால் வாட, அவர்களுக்கு சத்யவ்ரதன் அடைக்கலம் தந்து உணவளித்தான்.. ஒருநாள் தன்னை நாடு கடத்த வசிஷ்டரே காரணம் என்பதனால் அவர் வளர்த்து வந்த பசுவைக் கொன்று விஸ்வாமித்திரர் மனைவிக்கு உணவு அளித்தான்..இதனை அறிந்த வசிஷ்டர் அவன் தனது தந்தையின் கோபத்தைப் பெற்றதற்கும், பசுவைக் கொன்றது, அதனை உண்டது ஆகிய மூன்று பாவச் செயல்கள் செய்தமையால் திரிசங்கு என்ற பெயரில் சண்டாளனாக விளங்குவாய் என்று சாபமிட்டார்.. தவம் முடித்து வந்த விஸ்வாமித்திரர் பஞ்ச காலத்தில் தமது மனைவி மக்களுக்கு உணவும் அடைக்கலமும் அளித்த திரிசங்கு சண்டாள உடலுடனேயே சொர்க்கம் செல்ல வரமளித்தார்.. ஆனால் இந்திரன் அதனைத் தடுக்க, பூமிக்கும் சொர்க்கத்திற்கும் நடுவே திரிசங்கிற்கு ஒரு தனிச் சொர்க்கம் அமைத்து அதில் அவன் வாழக் கொடுத்தார்.. தற்போதும் நிலையற்ற தன்மையை திரிசங்கு சொர்க்கம் என்றே குறிப்பிடுகிறோம்.
அரிச்சந்திரன்

இவர் புராணகால கதையின் மிக முக்கியமான தலைவன்.. இவர் சூரிய குலத்தில் உதித்த 28 வது அரசன்.. தனது வாழ்நாளில் சொன்ன சொல் தவறாமை, உண்மையே பேசுதல் ஆகிய இரு நல் ஒழுக்கங்களையும் இறுக்கமாகப் பற்றிக் கொண்டு வாழ்ந்தார்..அக் காலத்தில் விஸ்வாமித்திரர் பல தொல்லைகளை அவருக்குஅளித்து சோதனை செய்தார்..அவை அனைத்தையும் அனுபவித்தும் தன் நிலை மாறாமல் இருந்தார் அரிச்சந்திரன்..அதன் பின்னர் அவரது குணாதிசயங்களை பெரிதும் மெச்சி தேவர்களும், விஷ்ணுவும், விஸ்வாமித்திரரும் போற்றி அவனுக்கு சொர்க்கத்தில் இடமளித்தனர்..இவரது வரலாறு ஒரு சுவாரஸ்யமான வரலாறு என்பதனால் நாடகங்களாகவும் திரைப்படங்களாகவும் வெளிவந்தன.. மகாத்மா காந்தி இவரது வாழ்க்கை முறையால் பெரிதும் கவரப்பட்டு தமது வாழ்க்கை முறையை மாற்றி கொண்டார்..ற நமது தமிழ் நாடு அரசாங்க முத்திரையிலும் ” வாய்மையே வெல்லும்” என்று குறிப்பிட்டு இருப்பதை வாசகர்கள் காணலாம்..
பகீரதன்

அயோத்தி நாட்டின் அரசர் இஷ்வாகு குலத்தவர் சகரர் என்பவர்.. இவர் குழந்தைப்பேறு இல்லாமல் தவம் செய்து அதன் பயனால் அவரது மனைவி சுமதிக்கு அறுபதினாயிரம் குழந்தைகளும் மற்றொரு மனைவி கேசினிக்கு ஒரு குழந்தையும் பிறந்தது.. பின்னர் ஒரு நாள் சகரர் அஸ்வமேத யாகம் செய்தார்.. அந்த யாகத்தின் குதிரை காணாமல் போயிற்று.. அதனைத் தேடி வந்த சகரரின் 60 ஆயிரம் மகன்களும் அக்குதிரை கபில முனிவரின் ஆசிரமத்தின் வாயிலில் நின்றுகொண்டு இருந்ததைக் கண்டு அக்குதிரையைக் கபில முனிவர் தான் பிடித்து வைத்துள்ளார் என்று தவறாகக் கருதி அவருடன் சண்டையிட்டனர்.. கபிலர் அவர்கள் அனைவரையும் சாம்பலாகுமாறு சாபமிட்டார்.. அவர்கள் சாம்பலாயினர்.. இதன் பின்னர் கேசினியின் மகன் அரசாண்டான்.. அவனுக்கு பின் அவனது மகன் பகீரதன் அரசாண்ட போது தமது மூதாதையர்களுக்கு ஏற்பட்ட சாபத்தினை அறிந்து சிவபெருமானை நோக்கி பல ஆண்டுகள் தவம் செய்தார்.. அதன் பயனாக வானிலிருந்து கங்கையைப் பூமிக்கு கொண்டு வந்து, அவனது மூதாதையரின் சாம்பலை அந்த கங்கை நீரினில் கரைத்து அவர்களுக்கு சாபம் நீங்கி முக்தி பெற வழி செய்தார்..அவர்களும் முக்தி பெற்றனர்..
அவனது விடாமுயற்சியின் பலனாக கங்கை பூமியில் பரவியதால்”பாகீரதி” என்று பெயர் பெற்றாள்.. தற்போதும் விடாமுயற்சியை குறிப்பிட பகீரத ப்ரயத்தனம் என்ற சொல் வழக்கில் உள்ளது..
பகீரதனுக்குப் பிறகு அவனது வழித்தோன்றல்களான அஜன், மற்றும் தசரதன் ஆகியோர் அயோத்தியை ஆண்டு வந்தனர்.. தசரதனின் மகனே ஸ்ரீ ராமர் என்பவர்.. புராணங்களின் படி ஸ்ரீ ராமர் விஷ்ணுவின் அவதாரமாக சித்தரிக்கப்படுகிறார்..
இனி இராமாயண காவியத்தை சுருக்கமாக அடுத்து நாம் காணலாம்..
நாளை சந்திப்போம்