பானுமதி மணாளன் தலைப்பை பார்த்தவுடன் யார் இவர்? மகாபாரதத்தில் இவர் எப்படி தொடர்பு கொண்டவர் என ஐயம் எழலாம்.. இவர் அல்லாமல் மகாபாரதம் இல்லை.. அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நபர்.. ஆம்.. அவன் நம் மகாபாரத நிகழ்வுகளின் எதிர் நாயகன்.. அதாவது வில்லன் துரியோதனன் தான்..

அவனது மனைவி பெயர்தான் பானுமதி.. முந்தைய கலிங்க நாடும் தற்போதைய ஒடிசா வின் மன்னன் சித்ராங்கதன்..
அவன் தனது மகள் பானுமதி யின் சுயம்வரம் நடத்த தீர்மானித்து பல நாடுகளின் மன்னர்களுக்கு அழைப்பு விடுத்தான்.. பாஞ்சால நாட்டில் நிகழ்ந்த சுயம்வரத்தில் தோல்வியை தழுவி திரௌபதியை நழுவ விட்டதும் பின்னர் துவாரகை யில் சுபத்ராவை மணம் செய்ய எடுத்த முயற்சியும் தோல்வியில் முடிவடைந்தது எனும் மன உளைச்சலுக்கு துரியோதனன் மிகவும் ஏமாற்றத்தில் இருந்தான்
.. அச்சமயத்தில் தான் கலிங்க மன்னன் சித்ராங்கதன் சுயம்வரம் அழைப்பு விடுத்திருந்தான்.. அந்த அழைப்பு துரியோதனன் மனதில் ஒரு இனம்புரியாத ஆர்வத்தை தூண்டியது.. அவன் தனது தந்தையின் அனுமதி பெற்று சுயம்வரம் நடக்கும் இராஜபுரா நகரினை அடைந்தான்..
கலிங்க மன்னன் சித்ராங்கதன் சுயம்வரத்தில் பங்கு பெறும் அனைத்து மன்னர்களையும் வரவேற்று சுயம்வரத்தின் நியதிகளை தெளிவு படுத்தினான்.. அதன்படி இராஜ குமாரி பானுமதி மண்டபத்தில் உள்ள ஒவ்வொரு மன்னரையும் பார்வையிடுவாள் என்றும் பார்வையிட்டு எம்மன்னரை அவளுக்கு பிடிக்கின்றதோ அம்மன்னனிடம் சில விவரங்களை கேட்டறிந்து பின்னர் அம்மன்னருக்கு மாலை சூடுவாள் என்று தெரிவித்தார்..
அவ்வாறே இராஜகுமாரி பானுமதி ஒவ்வொரு மன்னரையும் பார்வையிட்டு நிராகரித்து வந்து துரியோதனனிடம் வந்த போது அவன் அவளை நோக்கி புன்னகைக்கிறான்.

. அவளும் புன்னகைத்தாலும் ஏனோ அவனையும் நிராகரித்து விடுகிறாள்.. துரியோதனன் ஆத்திரமடைந்து அவள் கரங்களைப் பற்றி இழுத்த வண்ணம் ரதத்தினை நோக்கி செல்கிறான்..இதனை சற்றும் எதிர்பாராத கலிங்க மன்னனும் மற்ற மன்னர்களும் அவனிடமிருந்து பானுமதியைக் காப்பாற்ற சண்டை இடுகின்றனர்.. அவர்கள் அனைவரையும் கர்ணன் துரியோதனனுக்கு கவசம் போல் நின்று அவர்களை வீழ்த்துகிறான்.. இறுதியில் துரியோதனன் பானுமதியை அஸ்தினாபுரத்திற்கு கவர்ந்து வருகிறான்..
அவன் செய்த செயலினை திருதிராஷ்டிரனும் பீஷ்மரும் அதர்ம செயல் எனக் கண்டிக்கின்றனர்.. இதற்கு மறுப்பு தெரிவித்த துரியோதனன் முன்னர் பீஷ்மர் விசித்ரவீரியனுக்காக காசி தேசத்து இராஜ குமாரிகள் அம்பா, அம்பாலிகா ஆகியோரைக் கவர்ந்து வந்து திருமணம் செய்து வைத்தது அதர்மம் இல்லையா என்று வினவுகிறான்.. பீஷ்மர் அதற்கு மறுமொழியாக அந்த இராஜகுமாரிகள் விசித்திர வீரியனை மணம் செய்ய மறுப்பு தெரிவிக்க வில்லை என்பதால் அதர்மம் ஆகாது என்று உரைத்தார்.. துரியோதனன் தனக்கு இராஜகுமாரியை மிகவும் பிடித்திருந்தது என்றும் அவள் மீது அவன் காதல் வயப்பட்ட நிலையில் தான் அவளை கவர்ந்து வந்ததாகவும் கூறி தான் அவளுக்கு எவ்வித குறைவுமின்றி அன்பு செலுத்தும் ஆதர்ச கணவனாக இருப்பேன் என்று கூறுகிறான்..
இதனைக் கேட்ட பானுமதி கண்ணீருடன் திருதிராஷ்டிரனிடம் முறையிடுகிறாள்.. தனக்கு பிடிக்காத ஒரு நபர் பலவந்தமாக தன்னை கவர்ந்து வந்தது முறையல்ல என்றும், இதுதான் அந்நாட்டின் வழி முறைகளா என்றும் கேட்கிறாள்.. அதற்கு மறுமொழியாக, துரியோதனன் பானுமதியிடம் தான் அவளைக் கவர்ந்து வந்தது முறையற்ற வகையில் என்றாலும் அவள் மீது அவன் கொண்ட காதலால் அதனைச் செய்ததாக கூறினான்.. மேலும் தான் பல்வேறு குணாதிசயங்கள் கொண்ட ஒரு உணர்ச்சி வயப்பட்ட மனிதன் தானன்றி இராக்ஷசன் அல்ல என்றும், திருமணம் செய்து கொண்ட பின்னர், அவளிடத்தில் மிகவும் அன்பு செலுத்தும் ஒரு உன்னதக் கணவனாக இருப்பேன் என்றுமா உறுதிகூறுகிறான்.. அவ்வுரைக்குப் பின் பானுமதி அவனிடமிருந்து எவ்வாறு ஒரு வாக்கினைப் பெற இயலும் என்று யோசனை செய்கிறாள்..திருதிராஷ்டிரன் தன் அன்பு மகனின் ஆசையையும் நிராகரிக்க இயலாமலும், சபையின் பெரியோர்கள் மனமும் கோணாமல் முடிவெடுக்க இயலாமல் தடுமாற்றம் அடைகிறான்.. இறுதியில் தன் மகனுக்கு ஒரு வார காலம் அவகாசம் அளிப்பதாகவும் அந்த காலத்தில் பானுமதியின் நன்மதிப்பைப் அவன் பெற்றால், அவளின் விருப்பத்தினை அறிந்து அவர்களுக்கு திருமணம் செய்து வைப்பதாக வாக்களிக்கின்றான்.. இந்த காலகட்டத்தில் துரியோதனன் பானுமதியை பல் வேறு நற்செயல்கள் புரிந்து அவளின் நன்மதிப்பைப் பெறுகிறான்.. அவன் பானுமதியைத் தவிர வேறு எந்த பெண்ணையும் மணக்க மாட்டேன் என்றும் வேறு பெண்களை மனதார நினைக்க மாட்டேன் என்றும் அவளுக்கு வாக்களிக்கின்றான்.. பானுமதி அவன் மீது நம்பிக்கை கொண்டு அவனை காதலிக்க அவர்கள் திருமணமும் நடந்தேறியது..

அவர்களின் தாம்பத்திய உறவின் பலனாக இலக்கண குமாரன், இலக்குமணா என்கிற இரு மக்களைப் பெற்றனர். துரியோதனன் எளிதில் உணர்ச்சி வயப்பட்ட மனிதன்.. அதனால் ஆத்திரத்தில் அறிவிழந்து செயல் படுவான்.. சூதாட்ட நிகழ்வில் திரௌபதியை பணயமாக வைத்து தோற்றதினால் துச்சாதனனை அழைத்து திரௌபதியை தாசி என்று விளித்து சபைக்கு இழுத்து வர ஆணையிடுகின்றான்.. சபைக்கு வந்த திரௌபதியை “தாசியே! வா! வந்து என் மடியில் அமர்” என்று கொக்கரிக்கின்றான்..இவை அனைத்தும் அவனது ஆத்திரத்தில் அறிவிழந்து வெளிவந்த வெளிப்பாடே.. முந்தைய சுயம்வரத்தில் திரௌபதி தன்னை நிராகரித்ததற்கும் இந்திரப்ரஸ்தத்தில் தனக்கு திரௌபதியால் ஏற்பட்ட அவமானத்திற்கு பழிவாங்கும் நோக்கில் இச்செயல்கள் நிகழ்ந்துள்ளன.. இச்செயலுக்கு துரியோதனன் மட்டுமே காரணமல்ல..சூதில் தோற்கும் நிலை தொடரும் போதே யுதிஷ்டிரன் சூதில் ஒவ்வொரு நபர்களையும் வைத்து இழந்த யுதிஷ்டிரனும் ஒரு குற்றவாளியே.. திரௌபதியை நிறைந்த சபையில் துச்சாதனன் துகில் உருவிய போதும் பானுமதி அதனைத் தடுக்க முற்பட்டதாகவும் ஆயினும் பீஷ்மர் துரோணர் விதுரர் போன்ற பெரிய கனவான்கள் கூறியும் செவிமடுக்க மறுத்த துரியோதனன் சகுனியின் சூழ்ச்சி சூழலில் அகப்பட்டு அவனது கைப்பாவை ஆகிறான்.. இறுதியில் தான் விதைத்த நஞ்சு விதைகள் வ்ருக்ஷமாகி அதன் கிளைகள் அவன் கழுத்தை சுற்றி அவனைக் கொன்று விட்டது.. தன் கணவனின் அதர்ம செயல் கண்டு கண்ணீர் உகுத்த பானுமதி தன் கணவனின் அதர்ம செயல்களால் அவனும் அழிந்து அவளது மகன் இலக்கண குமாரனும் அழிந்த கொடுமை தாளாமல் அவர்களின் மறைவிற்குப் பிறகு நோய் வாய்ப்பட்டு இறந்து போனாள்.. துரியோதனன் பானுமதி ஆகியோரின் மகள் இலக்குமணா ஸ்ரீ கிருஷ்ணரின் மகன் சாம்பனை மணம் புரிந்து கொள்கிறாள்
கேரளத்தில் கொல்லம் அருகே மலநடா என்ற ஊரில் ஒரு துரியோதனன் கோயில் உள்ளது. அங்கே துரியோதனனை சாமியாக கும்பிடுகிறார்கள். எல்லாவகையான பூசைகளும் உள்ளன. துரியோதனன் ஆண்மை, பெருந்தன்மை ஆகியவை கொண்ட தெய்வ வடிவமாக வழிபடப்படுகிறார்
துரியோதனன் நாடு காண்பதற்காக இங்கே வந்தபோது இங்கே வாழ்ந்த குறவர் குடும்பம் ஒன்றில் தண்ணீர் வாங்கி அருந்தியதாகவும் அந்த நன்றிக்காக அவர்களுடன் தங்கி சிவபூசை செய்ததாகவும் தொன்மம். அவர்கள் கட்டிய கோயில் இது.

அருமையான பதிவு ,கூறத்தாழ்வார் வாழ்கை பற்றி ஒரு பதிவு தாருங்கள் சுவாமி…🙏🙏🙏
LikeLike
கண்டிப்பாக கூடிய விரைவில் பதிவு செய்கிறேன்.. தங்களின் மேலான கருத்துக்கு மிக்க நன்றி.. தொடர்ந்து படியுங்கள்.. மேலும் எனக்கு தெரிந்த விஷயங்களை பகிர்ந்து கொள்கிறேன்
LikeLike